கோகிலா மகேந்திரன் 

எழுத்தாளர்கள் வரிசை  – 2
 
கோகிலா மகேந்திரன் 
 
இவர் இலங்கையைச்சேர்ந்த பிரபலமான பெண்  எழுத்தாளர், கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பன்முகப் பரிணாமம் கொண்ட நூல்களை  எழுதியுள்ளார்.  பாத்திரங்களின் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் உளவியல் நோக்கில் தரிசிப்பதும்  ஆராய்வதும் இவரது கதைகளின் சிறப்பம்சமாகும்.
 
கோகிலா மகேந்திரன் செல்வி. கோகிலாதேவி சிவசுப்பிரமணியம்  என்ற இயற்பெயருடன்  (திருமணத்தின் பின் திருமதி கோகிலாதேவி மகேந்திரராஜா) யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழைப்  பகுதியிலுள்ள விழிசிட்டிக் கிராமத்தில் 17.11.1950 அன்று  பிறந்தார்.  இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். தாயார் செல்லமுத்து. பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியைக் கற்றார்.  1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, தெல்லிப்பழை மகாஜனக்  கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியையாகவும் சிலகாலம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியையாகவும் கடமையாற்றிய பின் 1994 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று, தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையில்  பணியாற்றி,  1999 இல் அதே கல்விப்புலத்தில் பிரதிப்பணிப்பாளராக உயர்ந்தார்.  கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்று, உளவளத்  துணையாளராக 25 வருடங்களுக்கு மேல் பணிசெய்தவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்வர். இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
 
1972 இல் “குயில்’ சஞ்சிகையில் வெளியான “அன்பிற்கு முன்னால்’ என்பது இவரது முதலாவது சிறுகதையாகும். மொத்தம் 76 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இக்கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவரது ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் “பிரசவங்கள்’, “வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்’ ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை. பின்னைய நூல் வடகிழக்கு மாகாண இலக்கிய விருதினையும் வென்றிருந்தது.
 
ஈழநாடு பத்திரிகையிலும் சுடர் சஞ்சிகையிலுமாக இவர் பல குறுநாவல்கள், நாவல்களை எழுதியிருப்பினும், “துயிலும் ஒருநாள் கலையும்’, “தூவானம் கவனம்’ ஆகிய இரு நாவல்களுமே நூலுருப் பெற்றுள்ளன. பெண்ணியக் கருத்துக்களை தனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டவர் இவர். நாடகங்களில் குயில்கள், கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, அரங்கக் கலையின் ஐம்பதாண்டு ஆகிய மூன்றும் பனுவல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. “விஞ்ஞானக் கதைகள்’ என்ற அறிவியல் புனைகதை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
 
“கேள்விகளின் முழக்கம்’ எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் “நாடக கலாவித்தகர்’ என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. இது தவிர மேலும் 23 நாடகங்களை இவர் எழுதி இயக்கியுள்ளார்.
 
மொத்தத்தில் இவர் எழுதி வெளிவந்த நூல்களில் உளவியல் நூல்களாக  Child Mental health,உள்ளக் கமலம், எங்கே நிம்மதி, சிறுவர் உளநலம், சின்னச் சின்னப் பிள்ளைகள், மகிழ்வுடன் வாழ்தல், மனக்குறை மாற வழி, மனம் எனும் தோணி – உளவியல் கட்டுரைகள், 
மனச்சோர்வு என்பனவும், நாடகத்துறையில் கலைப்பேரரசு ஏ.ரி.பி – அரங்கக் கலையில் ஐம்பதாண்டு, கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு, குயில்கள் என்பனவும், நாவல்களாக துயிலும் ஒருநாள் கலையும், தூவானம் கவனம் என்பனவும், சிறுகதைத் தொகுதிகளாக பிரசவங்கள், முகங்களும் மூடிகளும்,  வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம், என்பனவும், ஏனைய நூல்களாக தங்கத் தலைவி, பாவலர் துரையப்பா பிள்ளை,  மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும், விஞ்ஞானக் கதைகள் என்பனவும்  அடங்கும்.
 
இவரது ஆக்கங்களில் வெளிப்படும் பெண்ணிய  வாதமானது மரபுசார் பெண்ணியம் எனலாம்.  அதாவது, பெண்களுக்கு அவர்கள் பெண்கள் என்பதனால் இழைக்கப்படும் அநியாயங்கள், கொடுமைகளை  எதிர்க்கும் போக்கும், பெண்களின் முடிவெடுக்கும் உரிமை மற்றும் வேலைத்தலம், வீடு என்பவற்றில் சமவுரிமை என்பவற்றை வலியுறுத்துவதும் இவரது கதைகளில் வெளிப்படும் அதேவேளை, பெண்ணியத்தின் பெயரால் உடை, கலாசாரம்  என்பவற்றில் மேற்கத்திய அணுகுமுறைகளைப் பெண்கள்  பின்பற்ற வேண்டுமென்பதை இவர் ஆதரிக்கவில்லை.
 
இவரது பெரும்பாலான எழுத்துருவாக்கங்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளை மையப்படுத்தி அமைந்தபோதும், தூவானம் கவனம் போன்ற நாவல்களில் உலக மக்களுக்குப் பொதுவான தற்கால மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும் இவர் கையாண்டு வெற்றி  பெற்றுள்ளார்.  விண்ணியல்,  உயிரியல், சூழல் மாசடைதல், மருத்துவம் போன்ற பல துறைகள் சார்ந்த விஞ்ஞான உண்மைகளும் இவரது கதைகளுக்குள்  பொதியப்பட்டிருக்கும்.  இவ்வகையில், இவரது கதைகள் அறிவுக்கு விருந்தாக அமைய வல்லன.
 
பதிப்புகள் என்று வருகிறபோது, முடிந்தவரை பிழையின்றி நூல்களைப்பதிப்பிப்பது இவரின் தனித்துவமாகும். இவரது பெரும்பாலான நூல்கள் சிவன் கல்வி நிலைய வெளியீடு என்ற  பெயரிலும், கலை  இலக்கியக் கள வெளியீடு என்ற பெயரிலும் இவரது சொந்தப் பணத்திலேயே  வெளிவந்திருக்கின்றன. தென்னிந்திய வெளியீட்டாளர்கள் இவரது நூல்களை வெளியிட விரும்பியபோதும் பதிப்புப் பிழைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தினால் இவர் முடிந்த வரை வெளியீடுகளைப் பிறரிடம் ஒப்படைப்பதில்லை.
 
தெல்லிப்பழைக்  கலை  இலக்கியக் களத்தின்  நிறுவுனர்களில் ஒருவராகிய இவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வருகிறார். சோலைக்குயில் அவைக்காற்றுக்களம் என்ற அமைப்பையும் நிறுவி அதன்மூலம் மாணவர்களுக்கு நாடகமும் அரங்கியலும்  துறையில் பயிற்சி அளித்து வந்தார்.
 
பெண் எழுத்தாளர் என்ற வரையறைக்குள் இவரை அடக்குவதை விட, ஆங்கிலேய ஆட்சிக்குப் பிற்பட்ட  ஈழத்து ஆண், பெண் எழுத்தாளர்களுள் தனித்துவமானவராக இவரைச் சொல்வது அதிகம் பொருந்தும்.
 

நீங்கள் இவற்றையும் விரும்பக்கூடும்

ஆசிரியர்: விழிமைந்தன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய

Your email address will not be published.